Friday, June 18, 2010

தண்டவாள தகர்ப்பு... தடதடக்கும் பின்னணி! சீமானின் சந்தேகங்கள்?- ஜூனியர் விகடன்



புலிகள்... பழிகள்...!

டந்த 11-ம் தேதி... அதிகாலை இரண்டு மணிவாக்கில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பேரணி கிராமத்தை எழுப்பியது பயங்கரச் சத்தம்... தேசிய நெடுஞ்சாலையில்தான் ஏதோ விபத்து என்று மக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு ஓட... அங்கே எந்த அசம்பாவிதமும் இல்லை!


அதன் பிறகு, பல நிமிடங்கள் கழித்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் குலுங்கி


நின்றபோதுதான், நடந்த சம்பவம் என்னவென்று மக்களுக்குப் புரியத்தொடங்கியது.


10 அடி தள்ளி ரயில்வே தண்டவாளம் பிளக்கப் பட்டுக்கிடக்க... ரயில் டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் அடித்து நிறுத்தியிருந்தார். இதனால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர் தப்பியது. தண்டவாளம் தகர்க்கப்பட்ட இடத்தில், 'இந்திய அரசே, ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜ பக்ஷேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், தமிழின அழிப்புக்குத் துணைபோன இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டிக்கிறோம். தமிழா... இனியும் மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி!' என்று எழுதப்பட்ட காகிதத்தில், 'மேதகு பிரபாகரன் தம்பிகள்!' என்று கையெழுத்து. அதனால், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் தமிழீழ ஆர்வலர்கள் உண்டாக்கிய சதியாக இந்த விவகாரம் வெடித்துக் கிளம்ப... தமிழகம் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் திசைகள் யாவும் ஜிவுஜிவுத்துக்கிடக்கிறது!

மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் நம்மிடம், ''விக்கிர வாண்டியை அடுத்துள்ள சித்தணி என்ற இடத்தை சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றபோது, ரயில் நிலை தடுமாறுகிற அளவுக்கு தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்த ரயிலின் 'கார்டு' ராஜசேகரன், பேரணி ரயில் நிலைய மாஸ்டருக்கு வாக்கி--டாக்கி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். தகவல் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும், முண்டியம்பாக்கம் ரயில் நிலைய மாஸ்டருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே, திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபிநாத் ராவிடம், 'விக்கிரவாண்டிக்கும் பேரணிக்கும் இடையே தண்டவாளத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரயிலை 10 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தவும்' என ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லி இருக்கிறார். அதன்படி, டிரைவர் கோபிநாத் ராவ், மெதுவாக ரயிலை இயக்கியபடியே தண்டவாளத்தைக் கூர்ந்து கவனித்தபடியே வந்திருக்கிறார். சித்தணியில் 30 அடி தூரத்தில் தண்டவாளம் உடைந்து பெரிய பள்ளம் இருப் பதைப் பார்த்த டிரைவர், அடுத்த கணமே ரயிலை நிறுத்தி விட்டார்.

அதிகாலை 2.08 மணிக்கு வெடிச் சத்தம் கேட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.குண்டு வெடித்து தண்டவாளம் தகர்க்கப்பட்ட 145--வது மைல் கம்பம் அருகே உள்ள இடத்தை, சேலம் எக்ஸ்பிரஸ் 2.15 மணிக்கு கடந்திருக்கிறது. அப்படி என்றால் துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தில்தான் அந்த ரயில் கடந்து சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று அடி நீளத்துக்கு ஒரு தண்டவாளம் தகர்க்கப்பட்ட நிலையில், அதன் வழியே ரயில் சென்றிருக்க சாத்தியமே இல்லை. ஆனால், அந்த வழியாகத்தான் சேலம் எக்ஸ்பிரஸ் போனதாக ஏரியாவாசிகள் அடித்துச் சொல்கிறார்கள். துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் வந்தபோது பெரிய அதிர்வு ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகளுக்கு 'கார்டு' ராஜசேகர் தகவல் சொல்லி இருக்கிறார்!'' என்றார் அந்த அதிகாரி.


தண்டவாளம் தகர்க்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே சித்தணி கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் என்பவரின் வயலில் மோட்டார் கொட்டகை உள்ளது. அந்த கொட்டகையில் இருந்து மின்சார ஒயர் மூலம் மின் இணைப்பு கொடுத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்திருப்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது.

தண்டவாளத் தகர்ப்பில் தமிழ் அமைப்பு களின் பின்னணி இருப்பதாகச் சொல்லும் போலீஸ் தரப்பு, ''ஜெலட்டின் குச்சிகளை மின்சார இணைப்பில் கொடுத்து ஒயர் மூலம் வெடிக்கச் செய்திருப்பது எங்களைத் திகைக்கவைத்திருக்கிறது. பேட்டரி மூலமாகவோ நாட்டு மருந்து திரி மூலமாகவோதான் முன்பெல்லாம் இப்படிப்பட்ட சம்பவங்களை தமிழ்த் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். ஜெலட் டின் குச்சிக்களுக்கு மின்சார கனெக்ஷன் கொடுக்கும் டெக்னிக்கை இதுவரை தமிழ்த் தீவிரவாதிகள் பின்பற்றியதில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் தமிழர் விடுதலைப் படையின் ஆதிக்கம் ஒரு காலத்தில் பெரிதாக இருந்தது. இப்போது, அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அவ்வளவாக இல்லை என்றாலும், அந்த இயக்க ஆட்கள் மர்மமாகத்தான் நடமாடி வருகிறார்கள். குறிப்பாக, தமிழீழ வீழ்ச்சி, பழைய தமிழ் அமைப்புகளை ரொம்பவே உசுப்பேற்றி உள்ளது. இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோதும், பிரபாகரனின் சடலமாக இலங்கை அரசு காட்டியபோதும் மிகப் பெரிய அசம்பாவிதங்களை நிகழ்த்த சில தமிழ் அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால், உளவுத் துறையின் தீவிரக் கண்காணிப்பால் அவை அசுரகதியில் கண்டறியப்பட்டுத் தவிர்க்கப்பட்டன. சில தமிழீழ ஆர்வலர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, குண்டு வெடிப்பு நடந்த பேரணி கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள விக்கிர வாண்டி அண்ணா சிலை அருகே ராஜபக்ஷே உருவ பொம்மைக்கு கடந்த ஒன்பதாம் தேதி செருப்பு மாலை போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மெரினா ஏரியாவில் சிலர், 'ஈழத்துத் தமிழினம் அழிந்த நிலையில் செம்மொழி மாநாடு தேவையா?' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீசி இருக்கிறார்கள். அதன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகிறோம். தண்டவாளத் தகர்ப்பு நடந்த இடத்தில் பேனாவால் எழுதப்பட்டுக்கிடந்த பேப்பரை முன்னாள் தமிழ்த் தீவிரவாதிகளிடம் காட்டி விசாரித்து வருகிறோம்!'' என்கிறது வழக்கை விசாரிக்கும் போலீஸ் தரப்பு.


ஆனால், தமிழீழ ஆதரவாளர்களோ இதனை அறவே மறுக்கிறார்கள். ''தமிழர் அமைப்புகள் ஏதேனும் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் சம்பவத் துக்குப் பொறுப்பேற்று இருப்பார்கள். பழைய தமிழ் அமைப்புகள் ஏதும் இப்போது வலுவாக இல்லை. மேலும், இலங்கைத் தமிழனுக்கே பற்றுதலோடு குரல் கொடுக்கும் இயக்கத்துவாதிகள், இங்கு உள்ள தமிழர்களின் உயிர் பறிபோகக்கூடிய சதியில் இறங்குவார்களா? ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அறவழியில் தமிழ் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் அரசுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி வருகின்றன. சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதும், ராஜபக்ஷேயின் டெல்லி விசிட்டும் தமிழக மக்களை மனதளவில் கொதிக்க வைத்திருக்கின்றன. செம்மொழி மாநாடு மூலமாக மக்களின் மனதைத் திசை மாற்றிவிடலாம் என நினைத்த அரசுத் தரப்பு, சமீபத்தில் மாநிலம் முழுக்க சர்வே ஒன்றை நடத்தியது. அப்போது, ஈழ விவகாரம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், சமீப காலமாக தமிழகத்தில் 'திடீர் தமிழ் ஆர்வலர்களாக' உருவாகி வரும் சிலர், அரசின் கைப்பிள்ளையாக மாறி வருகிறார்கள். இன்னும் சிலரோ, சிங்கள அரசின் ஆசி பெற்றவர்களாக பெரிய அளவில் பணத்தோடும் 'தமிழ் ஆர்வலர்' என்ற போர்வையோடும் தமிழகத்துக்குள் நடமாடி வருகிறார் கள். தமிழீழ ஆதங்கத்தைக் குறைக்கும் வகையிலும், புலிகள் இயக்கத்தின் மீது வெறுப்பு உணர்வை உண்டாக்கும் வகையிலும் நடத்தப்பட்டு இருக்கும் தண்டவாளத் தகர்ப்புப் பின்னணியில் இத்தகைய ஆட்கள்தான் இருப்பார்கள்.


மேலும், தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தமிழ் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் ஆலோசனைகளும் நடந்து வருவதை இங்கே கவனிக்க வேண்டும். கூடவே, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதாகத் திட்டமிட்டு இருந்ததாகவும், அவரைக் குறிவைத்தே தண்டவாளத் தகர்ப்பு நடந்ததாகவும் கிளப்பிவிடுவதன் மூலம்... மத்திய அரசையும் தமிழீழ ஆதரவு இயக்கங்களுக்கு எதிராகத் திருப்பிவிடப் பார்க்கிறார்கள்.

தண்டவாளம் தகர்க்கப்பட்ட இடத்துக்கு மிகச் சரியாக 10 அடி தூரத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நுணுக்கமாக ரயிலை நிறுத்தி விபத்தைத் தவிர்ப்பது சாத்தியமே இல்லாதது. அதோடு, சம்பவம் நடந்த அடுத்த கணமே, 'இது நக்ஸலைட்களின் வேலை இல்லை' என டி.ஜி.பி-யான லத்திகா சரண் அறிவித்தது ஏன்... எப்படி? அதேவேகத்தில் வழக்கை உளவுத் துறையின் கையில் ஒப்படைத்ததும் சந்தேகங்களைக் கிளப்புகிறது!'' என சொன்னவர்கள்,

'

'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், சென்னையில் அசம்பாவிதங்களை அரங்கேற்ற திட்டமிட்டதாக மூன்று பேரை க்யூ பிராஞ்ச் போலீஸ் கைது செய்தது. 'சென்னையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த புலிகள் முயற்சி' என அப்போது செய்தி பரப்பிய போலீஸ், பிடிபட்டவர்கள் பிரபாகரனின் நேரடிப் பாதுகாவலரான கடாபியோடு போனில் பேசியதாகவும், அதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் சொன்னது. இத்தனைக்கும் பிடிபட்ட அந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும் வைத்திருந்தது ஒரு லேப்டாப் மட்டும்தான். பிறகு அந்த விவகாரம் அமுங்கிப்போனது!'' என்றார்கள். கூடவே,


''விழுப்புரம் சுற்று வட்டாரத்தில் எழுத்தாளர்கள் குழு ஒன்று இரவு நேரங்களில் 'செம்மொழி மாநாடு தேவையா?' என்று காரசாரமான கேள்விகளை எழுப்பியும்... அந்த ஏரியாவின் தி.மு.க. அமைச்சர்கள் தொடர்பான சொத்துக் குவிப்பு என்று ஒரு பட்டியலைப் போட்டும் திண்ணைக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு குழுக்கள் உருவாகி, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக மக்களைத் திருப்புவதாகத் திட்டம் இருந்தது. இப்போது, ரயில் விபத்தைக் காரணம் காட்டி சரமாரி கைது செய்ய முடியுமல்லவா?'' என்று கேள்வியும் எழுப்புகிறார்கள்!

சீமான் கிளப்பும் சந்தேகங்கள்!

தண்டவாளத் தகர்ப்பு குறித்து 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் சீமான் பல்வேறுசந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறார். அவரிடம் பேசினோம்.


''குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் 'மேதகு பிரபாகரனின் தம்பிகள்' எனத் துண்டுப் பிரசுரத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் சொல்கிறது. தலைவர்பிரபாகரனின் மீது பற்றுதல்கொண்ட தம்பி எவனும் இப்படி ஒரு கொடுமையைச் செய்ய நினைக்க மாட்டான். ஈழமே இடுகாடாக மாறிக்கிடந்தபோதும், தாங்கொணாத் தமிழக உணர்வாளர்கள், எந்த அசம்பாவிதத்தையும் நிகழ்த்தவில்லை. முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேர் தங்களைத் தாங்களே எரித்து மாய்ந்தார்களே தவிர, அடுத்தவர் மீது துரும்பைக்கூட ஏவவில்லை. ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது; இருப்புப் பாதை மரக்கட்டைகள் உருக்குலைந்து போய் விட்டன; ஆனால், அந்தத் துண்டு பிரசுரம் மட்டும் வெடிப்பு இடத்தின் அருகிலேயே எவ்விதச் சேதமும் இல்லாமல்கிடந்தது எப்படி? அங்கேயே காகிதம் கிடப்பதற்கு காற்றின் அசைவே இல்லாமல் இருந்ததா? ரயிலைக் கவிழ்த்து, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று பேரழிவை உண்டாக்க நினைத்தவர்கள் 'அதை நாங்கள்தான் செய்தோம்' என வெறும் காகிதத்தால் எழுதி வைப்பார்களா? ஒருவேளை ஒரு கோர சம்பவம் நடந்திருந்தால் அந்தப் பேரழிவுப் பிரதேசத்தில் காற்றுக்கே தாக்குப்பிடிக்காத சின்ன காகிதம் அங்கே இருக்காது என்பது அவனுக்குத் தெரியாதா?இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் இதை எல்லாம்நம்ப முடிகிறதா?


விசாரணைக்கு முன்பே, 'இது விடுதலைப் புலிஆதரவாளர் களின் செயல்தான்' என போலீஸார் சொல்வது ஏன்?'' என்கி றார் சீமான்.

No comments:

Post a Comment