Saturday, April 24, 2010

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்

[இலங்கையில் இரண்டாவது ஈழப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. சுவிஸ் "தமிழ் ஏடு" மாதப் பத்திரிகையில் "எடிட்டோர் பக்கம்" பகுதியில் பிரசுரமானது.]

இரண்டாவது தமிழீழ யுத்தம் என அழைக்கப்படும், இன்றைய "புலிகள் - ஸ்ரீ லங்கா இராணுவ யுத்தம்" 3 வது ஆண்டை நிறைவு செய்து, 4 வது ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில், இம் மூன்றாண்டு காலம் என்பது மிகச் சொற்பமே, எனச் சுலபமாக கூறிடலாம். பெருமளவு இழப்புகளையும், சிறிதளவு வெற்றிகளையும் சந்தித்து விட்ட இவ்விரு பக்க படைகளும், இதுவரை சாதித்தது என்று எதையும் கூறிக் கொள்ள முடியாத நிலை. சமாதான மூச்சிற்கு அவகாசம் எடுக்காது சமரைத் தொடர்வது பற்றி நாம் புரிதல் அவசியம். தம் இருத்தலுக்காகவோ, அன்றில் கௌரவ தடைக்கோ தயங்கி நிற்றல் பலர் அறியாதவொன்றல்ல.

இருப்பினும் மரணத்திற்குள்ளும், பட்டிநிக்குள்ளும் தமது வாழ்வை இழந்து விட்ட மக்களையிட்டு உணராதிருத்தலும் முடியாது. இன்றைய நிலையில், இழப்பதற்கு உயிரை விட ஏதுமற்ற நிலையில், மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சமதர்மம் பிறக்குமா? அல்லது தமிழீழம் பிறக்குமா? என்பதை ஆராயும் அளவிற்கு யாரும் வரவில்லை. 1990 ல் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இருந்த நட்புறவு அறுந்து விட்ட தருணம். இந்த யுத்தத்தின் நன்மை,தீமைகளை பகுத்தாயும் முன்பே மக்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி விட்டு, முழுத் தமிழீழ பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க புலிகள் எடுத்த முயற்சி. குறுகிய காலத்திற்குள் கிழக்கை மீட்டெடுத்த ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை, போராளிகளை காடுறையும் கெரில்லாச் சமருக்கு தள்ளியது. சில மாதங்களுக்கு போர் ஓய்ந்த வேளை, வடக்கில் புலிகளின் ஆட்சி, கிழக்கில் இராணுவ ஆட்சி எனும் வரையறையை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை விட, வவுனியா போன்ற எல்லைப்புறங்களை தக்க வைத்தலையே இராணுவம் விரும்பியது. ஒரு வகையில் இப்படி இருப்பதுவே தமக்கும் சிறந்தது, என இரு பக்கமும் கருதுவது போல தெரிந்தது.

யாழ் குடாநாட்டை சிங்கள முழுமையாக பார்த்தே ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. இடையில் இடம்பெற்ற வடமராட்சி தாக்குதலும் இந்திய தலையீட்டால் இடையில் நின்றது. கிழக்கில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் சிங்கள,முஸ்லிம் இனங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தனது காலைப் பலப்படுத்தவே இலங்கையரசு விரும்பியது. அது போல நூறு வீதம் தூய தமிழினத்தை (முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்) கொண்ட வடபகுதியில் தமது நிரந்தர தளத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் புலிகள் இறங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள், யாழ் குடாநாட்டுக்குள்ளே கருக்கொண்டதும், உருக் கொண்டதும், இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இதுவே "வட இலங்கைப் போராளிகள்" என உலக நாடுகள் அழைப்பதற்கு காரணமானது.

அப்பாவி தமிழ் மக்களின் வீடுகள் மீது, விமானக் குண்டுகளைப் பொழிவதால், இடம்பெயரும் மக்கள். போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நெருக்கம் விரிவடையும் என்பது இலங்கை இராணுவத்தின் கணக்கு. பெருமளவு இழப்புகளை சந்தித்த போதிலும், மக்கள் அரசின் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். புலிகள் இவ் வெறுப்பை தமக்கான ஆதரவாக மாற்றி வருதையும் கண்கூடாக காணக் கூடியதாகவிருந்தது.

முன்பு போராட்டப் பாதையில் இருந்து வழி மாற்றி விரட்டப்பட்ட மாற்று இயக்கங்கள். தமது இருத்தலுக்காய் முன்பு இந்திய இராணுவம், தற்போது இலங்கை இராணுவம் என்று கொழு கொம்பாய் பற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சிக்காத இவர்களது போக்கு. பழிவாங்கலை முதன்மைப் படுத்தல். அரசின் எடுபிடிகளாக செயற்படுதல். இவை யாவும் இவர்களையும் இராணுவ தாகம் கொண்ட குழுக்களாகவே இனங்காட்டுகின்றன. பலம் வாய்ந்த மாற்று அரசியல் இயக்கமாக தம்மை வளர்த்துக் கொள்ளாததும் இக் குழுக்களின் பலவீனமாகும்.

இப் போராட்ட வரலாற்றில் பல தலைமைகள் கொல்லப்பட்டதும், இம் மூன்றாண்டு காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரச தரப்பில் பாதுகாப்பு அமைச்சர், வட பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் மத்திய குழு உறுப்பினர்களான செங்கதிர், சர்வதேச தொடர்பாளர் கிட்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. அதை தொடர்ந்த விசாரணைகள் புலிகளை குற்றவாளிகளாக சுட்டி நின்றன. அது சர்வதேசத்தின் பார்வையை சிறு தீவின் பக்கம் திரும்பச் செய்தது.

போரின் அகோரத்திற்கு அப்பாவி மக்கள் முகம் கொடுப்பது ஒரு பக்கம். இவர்களும் எதிரிகளா? எனக் கேட்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பாராது, ஈவிரக்கமின்றி கொள்வதும் அவ்வப்போது நடந்துள்ளன. இவற்றை நியாயப்படுத்த யார் எத்தகைய காரணங்களைக் கூறிய போதிலும், இவை இனங்களுக்குள்ளே ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இரு பக்கமும் இராணுவரீதியிலான பலப்பரீட்சையிலேயே நம்பிக்கையோடு தொடரும் வேளை, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பலரிடம் குடிகொண்டிருத்தல் இயல்பு. புலிகளும், இலங்கையரசும் சமரசத்திற்கு இடம் கொடாத நிலையில், இந்தியாவின் தலையீடு அடிக்கடி வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஏற்கனவே சூடு கண்ட இந்தியா, தனக்குள்ளே உள்ள முடிச்சுகள் இறுகிய நிலையில் மீண்டும் இலங்கைக் களத்தில் குதிக்கும் நிலையிலிருக்கவில்லை. அகதிகளை வைத்திருப்பதைக் கூட ஒரு சுமையாகவே, இந்திய துணைக்கண்டம் கருதுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவை தாண்டி வர முடியாத நிலை. இந்நிலையில், முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட தீவாக காட்சி தரும் இலங்கை. எந்தவொரு தீர்வும் இராணுவ சக்திகளுக்குட்பட்டதாகவோ, அல்லது அவர்களின் பங்கேற்புடனோ அமையும் என அரசியல் அவதானிகள் கருதினார்கள்.

எது எப்படியிருப்பினும், சமாதானம் என்பது இன்னும் நீண்ட காலத்தின் பின்பே சாத்தியப் படக் கூடியது. நாட்டின் வட-கிழக்கு பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அளவு மோசமடைந்த நிலை. கிழக்கில் ஸ்ரீலங்கா படையினர் எதிரிகளை அளிப்பதை விட வயல்களை அழிப்பதே சிறந்தது எனக் கருதி செயற்பட்டனர். இயற்கையாகவே வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டை யுத்தம் பாலைவனமாக்கியது.
..................................நன்றி-கலைஅரசன்......................................

தமிழரின் பாலியல் வேட்கை - ஒரு ஐரோப்பிய கண்ணோட்டம்


தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஒரு நெதர்லாந்து எழுத்தாளர் தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார். ஐரோப்பியர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழர்களும் தெரிந்து கொள்வது நல்லது. "Te gast in India" என்ற நூலில் இருந்து தமிழாக்கம் செய்து தருகிறேன்.


பல நூற்றாண்டிற்கு முந்திய இந்தியாவை தமிழ்நாட்டில் தரிசிக்கலாம். ஆரியரின் பழக்கமான புலால் உண்ணும் முறை இங்கே கலாச்சாரமாகவில்லை. மொகலாயர்கள் தெற்கைப் பற்றி அதிகம் அக்கறைப்படவில்லை. தமது மதமாற்றும் நடவடிக்கையை வடக்கத்திய பிரதேசங்களுடன் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். பிரிட்டிஷார் கூட தமிழ்நாட்டில் அதிகளவு மாற்றங்களை கொண்டுவரவில்லை. மதராஸ் துறைமுகத்துடன் அவர்கள் திருப்தியடைந்தார்கள். இத்தகைய காரணங்களால் இங்கே திராவிட கலாச்சாரம் என்றென்றும் நிலைத்து நின்றது. பிரபலமான இந்துக் கோயில்கள் தெற்கில் காணப்படுவது ஒன்றும் அதிசயமல்ல. கோயில் கட்டடக்கலை ஒப்புவமை இல்லாதது.

"தமிழ் என்றால் இனிமை என்று அர்த்தம்" - எனக்கு அருகாமையில் இருந்த இளைஞர் சரளமான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். நிச்சயமாக, ஆரியரின் வருகைக்கு முன்பிருந்தே தென்னிந்திய பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் குறிக்க, இனிமை என்ற சொல் சிறந்த வரைவிலக்கணம். தமிழர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், அன்பானவர்கள் என்று வாய் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். நெற்றியில் வந்து விழும் அடர்ந்த சுருளான முடிகளுக்குள், கண்கள் பளிச்சிடுகின்றன. அவர் தன்னை வின்சென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"அது ஒரு கிறிஸ்தவப் பெயர் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருந்து வருகிறீர்கள் அல்லவா?"
நிறைய அர்த்தங்களுடன் கண் சிமிட்டுகிறார்.
நாம் கிறிஸ்தவர்கள் இல்லை, எனக் கூறிய போது துணுக்குற்றார். நாம் கடவுளை நம்பவில்லை என்று சொன்னதும் பொறி பறந்தது. நாம் சொன்னதை அந்த இளைஞர் தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு மொழி பெயர்த்து கூறிய பின்னர், அவர்களும் நம்ப மறுத்து எம்மை உற்று நோக்கினார்கள்.

வின்சென்ட் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் இருந்து மகாபலிபுரத்திற்கு வந்திருந்தார். கொடைக்கானல் கிறிஸ்தவ கேரளாவின் எல்லை அருகில் உள்ளது. "தமிழர்கள் இனிமையானவர்கள். ஆனால் மலையாளிகள் வேறு விதமானவர்கள்." விரலால் சைகை காட்டியபடி தொடர்கிறார். "மலையாளிகளை நம்ப முடியாது. ஆனால் அவர்கள் கெட்டவர்கள் அல்ல." வின்சென்ட் ஒரு டாக்சி சாரதி. பல இடங்களைப் பார்த்திருக்கிறார். நாம் பாறையில் தாவும் போது, வின்சென்ட் தமிழர்களைப் பற்றிய இன்னொரு கருத்தை உதிர்க்கிறார். "இன்றைய காலம் தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருகின்றது. நிறைய ஆபாசப்படங்களைப் பார்க்கிறார்கள். 'வின்சென்ட் அப்படி இல்லை.' நாம் கேட்காமலே, அவர் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்டு சொல்ல முடியாத படி, பாதையில் ஒரு பெண் பக்தைகளின் குழு எதிர்ப்படுகின்றது. அவர்கள் தமது தலைமுடிகளை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, மொட்டந்தலையில் மஞ்சள் சந்தனம் தடவி இருந்தார்கள்.

"அங்கே பாருங்கள்!" வின்சென்ட் சுட்டிக்காட்டிய இடத்தில் 'இன்டியானா ஜோன்ஸ்' சுவரொட்டிகள் காணப்பட்டன. "விறுவிறுப்பான நல்ல படம். பார்த்தீர்களா?" "ஆனால் இப்போதெல்லாம் ஆபாசப்படங்களைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது." தலையை ஆட்டுகின்றார். "இப்போதெல்லாம் நிறையப்பேர் புகைக்கிறார்கள். கெட்ட பழக்கம். பெண்களும் புகைக்க ஆரம்பித்திருப்பது இன்னும் மோசமானது." - ஒரு 'கப்' பாலைக் குடித்துக் கொண்டே விரிவுரையாற்றுகிறார். "ஏன், அப்படி?" என்ற எமது கேள்விக்கு, "பெண்கள் தீய பழக்கங்களைப் பழகக் கூடாது. பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அது உடைந்தால் அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. ஒரு பெண் எப்போதும் நல்ல விஷயங்களைத் தான் செய்ய வேண்டும். வேற்று ஆண்களைப் பார்க்கக் கூடாது. தரையைப் பார்த்து நடக்க வேண்டும்."

இன்னொரு தடவை தபால் கந்தோர் சென்றிருந்தோம். கல்லாவில் இருந்த இளைஞன் முன்னால் நிற்கிறோம். "ஆஹா! நெதர்லாந்திற்கு அனுப்புகிறீர்களா?" நாம் கொடுத்த தபாலில் இருந்த முகவரியைப் பார்த்து விட்டு கூறுகிறார். பின்னர் குரலை சற்றுத் தாழ்த்தி கேட்கிறார். "நெதர்லாந்து. அங்கே யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்படியல்லவா? உங்கள் நாட்டில் அப்படி நடப்பதாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன." பத்திரிகையில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என நாம் அந்த இளைஞனை எச்சரிக்கிறோம். இளம் இந்தியர்கள் மனதில் மேலைதேசத்தவர்களின் பாலியல் பழக்கவழக்கம் பற்றிய தகவல்கள் சற்று தூக்கலாகவே இருக்கின்றன. ஆனால், எப்படி தபால் அலுவலக பணியாளர் அதைப்பற்றி பேசமுடியும்? அல்லது வின்சென்ட் போன்றவர்களை எடுத்துக் கொள்வோம். "தமிழர்களின் பாலியல் வேட்கை" பற்றி முறையிடுகிறார்கள். மகாபலிபுரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் கவர்ச்சி அலை வீசுவதை உணர்கிறோம். நட்பாகப் பழகும், மென்மையான இந்த மனிதர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்று எம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.

எமது விடுதியில் ஒவ்வொரு காலையும் அந்தப் பணியாளர் தேநீருடன் வந்து எம்மை எழுப்புவார். ஆண்-பெண் உறவு பற்றி என்ன நினைக்கிறார் என்று, அந்த முதிய பணியாளரைக் கேட்கிறோம்.
"மேற்கத்திய பெண்கள், தெரியாத ஆண்களோடு பேச்சுக் கொடுப்பார்கள். எமது சமூகத்தில் அது ஏற்புடையதல்ல."
"மேற்கத்திய பெண்கள் இந்தியர்களைப் போல அடக்கமாக உடை உடுப்பதில்லை."
"ஒரு இந்தியப் பெண், உடல் பாகங்களை காட்டும் படி உடை உடுத்தியிருந்தால், அத்தோடு புகை பிடிக்கவும் குடிக்கவும் செய்தால், அந்தப் பெண் விற்பனைக்கு கிடைப்பாள், என்று அர்த்தம்."
நாம் குறுக்கிட்டு, "இந்தியப் பெண்கள் வயிறும், முதுகும் தெரியும் படி சேலை உடுக்கிறார்களே?" எனக் கேட்டோம்.
"அது அந்தப் பெண்ணின் கணவன் ஒழுங்காக சாப்பாடு போடுகிறானா, என்று பார்ப்பதற்கு." சொல்லி விட்டுச் சிரிக்கிறார். "ஆனால் தோள், தொடை, மார்பைக் காட்டிக் கொண்டு ஆடை அணிவது தவிர்க்கப்பட்டுள்ளது."
"இந்தியாவில் ஆணும், பெண்ணும் கையேடு கை கோர்த்து நடப்பதில்லை. வீதியில் முத்தமிடுவதில்லை. ஒரு இந்திய ஆண் ஒரு போதும் ஒரு பெண்ணின் அருகில் அமருவதில்லை. விருந்தினராக ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்லும் ஒரு இந்திய ஆண், அந்த வீட்டுப் பெண்களுடன் பேசுவதில்லை. வெளிநாட்டினருக்கு இந்த பழக்கவழக்கங்கள் தெரியாது. இதனால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன." சிரிப்புடன் சிறிய இடைவெளி விட்டு தொடர்கிறார். "உங்களது நாட்டில் விருந்துபசரிக்கும் வீட்டு பெண்களுடன் பேசாமல் விடுவது அநாகரீகம் எனக் கேள்விப்பட்டேன்."

அடுத்த நாள் டாக்சியில் சென்னை செல்லும் வழியில் "Womens Club" என்ற செக்ஸ் படத்திற்கான போஸ்டர்களைப் பார்த்தேன். போஸ்டரின் மேலே ஒரு அறிவிப்பு. "அளவுக்கு மிஞ்சிய பாலியல் உங்கள் உடல்நலத்திற்கு கேடாகலாம்." என்ற சுகாதார அமைச்சின் அறிவித்தல். தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கும் தெரிந்து விட்டது.

நாட்டில் வசூலிக்கப்படாத வரித்தொகை ரூ.2 லட்சம் கோடி


இந்திய தொழிலதிபர் ஒருவர் ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார் என்ற உண்மையை 'கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டிங் ஜெனரல்' எனப்படும் இந்திய தலைமைக் கணக்குத் துறை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலிக்கப்படாமல் உள்ள வருமான வரியின் அளவு ரூ.2 லட்சம் கோடி என்றும் அறிவித்துள்ளது. 2008-2009ம் ஆண்டில் வசூலிக்கப்பட்டதை விட 65 சதவிகிதம் குறைவாகவே 2009-2010ம் நிதியாண்டில் வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வரிபாக்கி முழுவதுமாக வசூல் செய்யப்பட்டால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு பங்கு சரிகட்டப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மட்டும் ரூ 71,874 கோடி பாக்கி வைத்துள்ளார். அவர் பெயர் ஹஸன் அலி. இதே பெயரில் பண்ணை மற்றும் பல தொழில்களை நடத்துபவர். இவரிடம் வரி வசூலிக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தலைமைக் கணக்குத் துறை கேள்வி எழுப்பியுள்ளது.

கோப்பை கைப்பற்றுமா சென்னை கிங்ஸ்! * நாளை மும்பை அணியுடன் மோதல்


ஐ.பி.எல்., கோப்பை வெல்லப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும். கடந்த இரு முறை வெளிநாட்டு வீரர் தலைமை தாங்கிய அணிகள் தான் சாம்பியன் பட்டம் வென்றன. இந்தியன் பிரிமியர் லீக் என்று பெயர் வைத்து கொண்டு வெளிநாட்டு வீரர் தலைமையிலுள்ள அணி கோப்பை வாங்குகிறது என விமர்சனங்கள் எழுந்தன. இம்முறை பைனலில் மோதும் சென்னை, மும்பை அணிகளுக்கு இந்தியர்கள் கேப்டன் என்பதால், முந்தைய விமர்சனங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
மும்பையில் நடந்த இரண்டு அரையிறுதி போட்டிகளும், உப்புச்சப்பின்றி முடிந்தது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருப்தியளிப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் போட்டியின் முடிவு இப்படியா போகணும் என அங்கலாய்கின்றனர். சூதாட்டம் புகார் வேறு எழுந்துள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் உண்மையாக விளையாடித்தான் முடிவு நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மகிழ்ச்சியே; ஒரு வேளை போட்டியின் நிலைமைக்கு ஏற்ப, "புக்கிகளால்' முடிவு செய்யப்படும் பட்சத்தில் கிரிக்கெட்டை வெறுக்கும் நிலை ஏற்படும்.


இந்நிலையில், நாளை நடக்கும் பைனலில் மும்பை- சென்னை மோதுகிறது என்ற நிலைமை போய், ஜெயிக்கப்போவது சச்சினா... தோனியா என்ற ரீதியில் சூதாட்டக்காரர்கள் கொளுத்தி போட்டுள்ளனர். தொடர் துவங்கியதில் இருந்து, பெரும்பாலான ரசிகர்கள் மும்பை அணிதான் சாம்பியன் கோப்பை வெல்லும் என்றனர். இரண்டாவது சுற்றில் வீறு கொண்டு எழுந்த சென்னையின் வேகத்தை பார்த்து ரசிகர்கள் போக்கு மாறியது. இறுதிப்போட்டிக்கு சென்னை வந்தால் நல்லதொரு ஆட்டத்தை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்து இரண்டு அணியினரும் முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை, போட்டியை போட்டியாக பாவித்து விளையாடினால், ஐ.பி.எல்.-3 முடிவு மங்களமாக இருக்கும்.
மூன்று ஐ.பி.எல்., போட்டிகளில் அரையிறுதிபோட்டி வரை கணக்கில் எடுத்துக்கொண்டால் சென்னை அணி 46 ஆட்டங்களில் விளையாடி, 23 ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 13 முறையும், இரண்டாவதாக சேஸ் செய்து பத்து முறையும் வென்றுள்ளது.


மும்பை 43 ஆட்டங்களில் விளையாடி 22 வெற்றி பெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்து 12 முறையும், இரண்டாவதாக பேட் செய்து பத்து முறையும் வென்றுள்ளது. சென்னை அணி 20 முறை டாஸ் வென்றுள்ளது. மும்பை 23 முறை டாஸ் வென்றுள்ளது.
மூன்று ஐ.பி.எல்., தொடரையும் சேர்த்து மும்பையும் சென்னையும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா மூன்றில் வென்றுள்ளது.
இந்தாண்டு மும்பை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 211. அதே போல் சென்னையின் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 242. இதை ராஜஸ்தான் அணிக்கு எதிராகத்தான் இரு அணிகளும் எடுத்தன.
கடந்த மாதம் 25ம் தேதி மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட் செய்து 180 எடுத்தது. இதை 19 ஓவர்களில் 184 எடுத்து மும்பை வெற்றி பெற்றது.
ஏப்.6ம் தேதி சென்னையில் நடந்த போட்டியில் சென்னை முதலில் பேட் செய்து 165 எடுத்தது. மும்பை சேஸ் செய்து 141 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!

அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!


போன பிறவியிலே புலிப்பாணி சித்தரா பொறந்திருப்பாரோங்கிற சந்தேகம் டிஆரை பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. "பாரப்பா பகலவனும் 10 ல் நின்று"ன்னு அவரு சித்தர் பாடலை சத்தம் போட்டு பாடும்போதெல்லாம், நாங்க வெளியிலே நின்னு மிரட்சியா கேட்போம். நாலு வரி பாடி முடிக்கறதுக்குள்ளே, "யோவ்... நான் சோதிடத்தை பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்றவன்யா, எங்கிட்டயேவா?"ன்னு யாரோ ஒரு கிளி ஜோசியனை வளைச்சு வச்சுகிட்டு அவனை 'கிலி' ஜோசியனாக்குவாரு.

நெல்ல போட்டு பசியாத்துவாய்ங்கன்னு பார்த்தா, இப்பிடி 'இடி' மாதிரி சொல்ல போட்டு வெறியேத்துறாய்ங்களேன்னு நினைச்ச அப்பாவி கிளி, கீச் கீச்சுன்னு கத்தும். உடனே நம்ம தலைவரு, "வெள்ள ரோஜாவை கிளி ஒன்ணு லவ் பண்ணுச்சாம்..."னு கிளி ஜோசியன்கிட்ட ஒரு கதைய எடுத்துவிட்டு, அவன காசு கூட கேட்க விடாதளவுக்கு பீதிய கிளப்பி பிகில் ஊதுன நாளெல்லாம் உண்டு.

"பத்தாமிடத்திலேர்ந்து குரு பார்க்கிறனே, இந்த நேரத்திலே பாத்ரூம் போவலாமா?"ன்னு ஆஸ்தான ஜோசியருகிட்டே கேட்டு, அவரையே டெரர் ஆக்குவாரு. ஜோசியரும், "அவன் பார்த்தா என்ன? நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே"ன்னு ஒரு பதில சொல்லி சமாளிப்பாரு. இப்படி நடமாடும் சென்ட்டிமென்ட் ஸ்டோராக உலா வரும் நம்ம தலைவருக்கு இக்கட்டான நேரம் ஒன்ணு வந்திச்சு. அந்த நேரத்திலே போயி சொக்காட்டான் ஆட்டம் ஆடி சூழ்நிலைய பாழாக்குன சில விசுக்கட்டான்கள் பற்றிய செய்திதான் நான் சொல்லப் போறது...

சலீம் சலீம்னு ஒரு வேலைக்காரர் இருந்தாரு அங்கே. அண்ணன் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடி வில்லு மாதிரி வெடச்சுக்கிட்டு வேலை செய்யுறதுல கில்லாடி. ஒரு படத்திலே நம்ம தலைவருக்கு வழக்கறிஞர் வேடம். இன்விடேஷனுக்கும் பத்திரிகை விளம்பரத்துக்கும் போட்டோ எடுக்கணும். எப்பவோ ஆரம்பிச்ச பிளான், ராகு காலம் முடியறதுக்குள்ளே எடுக்கணுமேங்கிற பரபரப்பான கட்டத்துக்கு வந்திருச்சு. வக்கீல் கோட்டு, வாரியும் படியாத தலைன்னு தலைவன் வந்து நிக்கிறாரு. அப்பதான் போட்டோகிராபர் லென்சை நோண்டிக் கொண்டிருக்க, "டேய், ங்கொ..., ராகு வர இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. அதுக்குள்ளே எட்றா"ன்னு அதிரி புதிரி கௌப்புறாரு தலைவரு. "ந்தா வந்திட்டேண்ணே..."ன்னு சொன்ன போட்டோகிராபர், லென்சை சரி செய்ய, திடீர்னு யுத்த களத்திலே தலைய விட்ட சலீம், "அண்ணே வக்கிலுங்கோல்லாம் கையிலே ஒண்ணு வச்சிருப்பாங்களே, அது எங்கே?"ன்னாரு.

ஆமாண்டா, கேஸ் ஷீட்டு! டேய் எவனாவது ஓடிப்போயி ஒரு கேஷ் ஷீட்டு எடுத்திட்டு வாங்களேண்டான்னாரு டி.ஆர். தொண்டர்களும், தளபதிகளும் நாலா திசைக்கும் ஓட, வாட்சை பார்த்துக் கொண்டே "குயிக் குயிக்"குன்னு கத்திகிட்டே இருந்தாரு தலைவரு. சரியா அஞ்சாவது நிமிசம், அத்தனை பேரும் திரும்பி வந்தாய்ங்க. சொல்லி வச்ச மாதிரி எல்லார் கையிலேயும்.... கேஸ் ஷீட்டா? அட, பாழா போன கொழாப்புட்டு மண்டையனுங்க! அத்தனை பேரும் எடுத்திட்டு வந்தது கேஸ் ஷீட் இல்லை. ஆளுக்கொரு ஆடியோ கேசட்...!

அதுக்குள்ளே ராகு காலம் என்ட்ரி. பிறகென்ன, வழக்காடு மன்றம் கசாப்பு கடையானது. ஆடியோ கேசட் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் ராக ஆலாபனையோடு கொஞ்சம் பிரசாதமும் கொடுத்தனுப்பினாரு தலைவரு.
-----------------------நன்றி அந்தனன்--------------------------

சிறந்த கேப்டன் டோனி

சிறந்த கேப்டன் டோனி

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

மும்பை : பதற்றமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் டோனியே உலகின் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் கூறியுள்ளார்.
ஐபிஎல் சீசன் 3 டி20 தொடரின் 2வது அரைஇறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமாக பந்து வீசி (4&1&13&4) 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே வீரர் போலிஞ்சர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று கூறியதாவது:
கேப்டனாக டோனி செயல்படும் விதம் பிரம்மிப்பாக உள்ளது. பதற்றமான நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அவரது அதிரடி ஆட்டமே அரைஇறுதிக்கு தகுதி பெற காரணமாக இருந்தது. எல்லா வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவரிடத்தில் இருந்து நிறைய பாடம் கற்றுள்ளேன். எங்களது பலவீனமான பந்துவீச்சை பலமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. யாருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். எனது சிறப்பான பந்து வீச்சுக்கு அவரே காரணம். உலகின் மிகச் சிறந்த கேப்டன் டோனி.
மும்பைக்கு எதிரான இறுதி போட்டி சவாலானது. அதே நேரத்தில் அந்த அணியை வீழ்த்தும் தகுதி எங்களிடத்தில் உள்ளது. இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சவாலாக உள்ளது. இவ்வாறு, போலிஞ்சர் கூறினார்.