Saturday, May 22, 2010

ஒரே குடும்பத்தில் 16 பேர் பலி

மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 16 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சவூதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் சமீர் என்பவரின் பாட்டி இறுதிச்சடங்கில் பங்கேற்ற வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். பாட்டி இறந்த துக்கத்தில் இருந்த சமீருக்கு ஒரே நேரத்தில் 16 உறவினர்களை பறிகொடுத்தது தாங்கிக் கொள்ள முடியாத சோகமாகி விட்டது.


விமானத்தை ஓட்டியவர் செர்பியன்

161 பேரை பலி கொண்ட விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் லட்கோ குளுசிகா. 55 வயதான இவர் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். விமானம் ஓட்டுவதில் இவர் நன்கு அனுபவம் பெற்றவர். விபத்துக்குள்ளான விமானம் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆகிறது. எனவே விமானத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கருப்பு பெட்டியை தேடுகிறார்கள்

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டியை தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடிவருகிறார்கள். அதில் விமானி கடைசியாக பேசியது எல்லாம் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரிய வரும்.

மங்களூரில் விமான விபத்து: 169 பலி

மங்களூர்: மங்களூரிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 156 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏதாகிலும் ஒன்று தேவை

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் பி..​ படிப்புகளில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையைத் தளர்த்தி,​​ 50 சதவீதம் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.​ இந்தத் தளர்வு மற்ற பிரிவினருக்கும் உண்டு.​ அதாவது,​​ பிற்படுத்தப்பட்டவர்கள் 45 சதவீதம்,​​ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 சதவீதம்,​​ தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்பதுதான் தற்போது அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை.


இந்தப் புதிய நடைமுறைக்கான காரணத்தை உயர்கல்வி அமைச்சர் .​ பொன்முடி விளக்கியிருக்கிறார்.​ தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களைப் போன்று,​​ "பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்' என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால்,​​ அரசு இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.


தனியார் பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்,​​ பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மையே.​ ஆனால் அங்கே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.​ அது பெயரளவில் நடத்தப்படுகிறதா அல்லது உண்மையாகவே நடத்துகிறார்களா என்பது வேறுவிஷயம்.​ என்றாலும்,​​ நுழைவுத்தேர்வு என்கின்ற வரைமுறையை அவர்கள் வைத்துள்ளனர்.


அதேபோன்று,​​ அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரும்போதும்கூட,​​ குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.​ ஆனாலும்,​​ நுழைவுத் தேர்வில் அவர்கள் பெறும் தரவரிசை ​(ரேங்க்)​ அடிப்படையில்தான் மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.​ ​


நுழைவுத் தேர்வின் தரவரிசை மட்டுமே போதுமானது என்று நிபந்தனை வைத்தால்,​​ நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்;​ நுழைவுத் தேர்வு எழுதும் பயிற்சி அல்லது நகரங்களில் இதற்காக நடத்தும் தனிவகுப்புகள் இல்லாதது ஆகிய காரணத்தால் கிராமப்புறத்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றும்கூட,​​ நுழைவுத் தேர்வில் தரவரிசையில் இடம்பெற முடிவதில்லை என்கிற நிலைமை இருந்தது.​ இதனால்,​​ அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு கட்-ஆப்மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் இரண்டையும் சேர்த்தே கணக்கிட்டு தரவரிசைப்படுத்தினார்கள்.​ ​


அதன்பிறகும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர முன்வராததாலும்,​​ இந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வையும் உடன் எழுதி,​​ பிற மாநில ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துச் சென்றுவிடுவதும் பரவலாகக் காணப்பட்டபோது,​​ நுழைவுத் தேர்வு எழுதும் வழக்கத்தையே ஒழித்துவிட வேண்டும் என்று தனியார் கல்லூரிகள் முடிவு செய்தன.​ அதன்படியே நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.​ தமிழக மாணவர்களும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துபோனார்கள்.​ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட வேளையில்,​​ குறைந்தபட்ச தகுதி 60 சதவீதமாக இருந்தது.​ ​


இப்போது நுழைவுத் தேர்வும் கிடையாது.​ தகுதியும் 50 சதவீதமாகக் குறைப்பு என்றால்,​​ இதன் மூலம் பொறியியல் மோகத்தை மையமாக வைத்து தனியார் கல்லூரிகளுக்கு லாபம் கிடைக்குமே தவிர,​​ தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கோ,​​ இதில் சேரும் மாணவர்களுக்கோ எந்தப் பயனையும் தராது என்பது உறுதி.


பொறியியல் படிப்பு என்கிற மோகத்தினால் சேரும்,​​ அல்லது பெரும்பாலும் பெற்றோர்களால் சேர்க்கப்படும் மாணவர்கள்,​​ பொறியியல் படிப்பை நான்கு ஆண்டுகளில் முடிக்க முடியாமல்,​​ தேர்வுகளில் பலமுறை தோல்வியுற்று,​​ ஆறு,​​ ஏழு ஆண்டுகளாக எழுதி,​​ விடைத்தாளை விரட்டிப்போய் பட்டம் பெற்று,​​ வேலையும் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய பொறியியல் பட்டதாரிகளில் 50 சதவீதத்தினரின் நிலைமை.​ ​


ஒவ்வொரு பருவத் தேர்விலும் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர் விகிதப் பட்டியலைப் பார்த்தால் முதல்நிலை வகிக்கும் கல்லூரிகளில் கூட 10 சதவீதம் பேர் தோல்வியடைந்திருப்பதைக் காண முடிகிறது.​ இந்தப் பட்டியலில் வெறும் 50 கல்லூரிகள் மட்டுமே 75 சதவீதம் வரை மாணவர் தேர்ச்சியைக் காட்டுகின்றன.​ மற்ற கல்லூரிகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.​ இதற்குக் காரணம்,​​ கல்லூரிகள் தரம் இல்லாதவை என்பது மட்டுமல்ல,​​ மாணவர்களாலும் உயர் கணிதத்தை பயில முடியவில்லை என்பதுதான் உண்மை.


பள்ளிகளில் சொல்லித் தருவதைப்போல கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.​ அங்கே புரிதல் உள்ள மாணவர்களை முன்னிறுத்தியே வகுப்புகள் எடுக்கிறார்கள்.​ மாணவர்களுக்கு வழியைக் காட்டுவதோடு சரி.​ புத்தகங்களைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்கி தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது கல்லூரி மாணவர்களின் வேலையாக இருக்கிறது.​ இதனை மேற்கொள்ள,​​ ஒரு மாணவனுக்குத் தன் பாடத்தில் ஆர்வமும்,​​ இயல்பூக்கமும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.​ ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் உள்ள தனிப்பட்ட ஆர்வம்,​​ புரிதல் ஆகியவற்றின் அடையாளம்தான் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அல்லது நுழைவுத் தேர்வில் கிடைக்கும் தரவரிசை.


தமிழ்நாட்டில்,​​ தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகத் தகுதி மதிப்பெண்ணை குறைப்பார்கள் என்றால்,​​ பொறியியல் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்.​ நுழைவுத் தேர்வு வேண்டாம் என்றால் தகுதி மதிப்பெண் 60 சதவீதமாக இருப்பதுதான் தமிழகத்தின் பொறியியல் படிப்புக்கு மதிப்புடையதாக இருக்கும்.


தகுதி மதிப்பெண்ணையும் குறைத்து,​​ நுழைவுத் தேர்வையும் ரத்து செய்துவிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தினால்,​​ எல்லா தனியார் கல்லூரிகளுக்கும் ஆள் சேரும்.​ ஆனால்,​​ நாளைய தமிழகத்தின் பொறியாளர்களுக்கு வெளிமாநிலங்களில் மதிப்பே இருக்காது.​ தமிழ்நாட்டு நிறுவனங்களும்கூட,​​ இந்த பொறியாளர்களைப் பணியமர்த்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும்.​ தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தூக்கிவிடுவதற்காக தமிழகத்தின் பொறியியல் கல்வியைத் தரம் தாழ்த்தலாமா?

Friday, May 21, 2010

தமிழக மேல்-சபை: தேர்தல் பணி தொடங்கியது- நரேஷ்குப்தா பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் மேல்- சபை அமைப்பதற்கான உத்தரவில் கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து மேல்- சபை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

மேல்- சபையில் மொத்தம் 78 பேர் உறுப்பினர்களாக (எம்.எல்.சி.) இடம் பெறுவார்கள். இதில் 3-ல் ஒரு பகுதி அதாவது 26 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 26 பேர் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வாவார்கள்.

பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தலா 7 பேர் வீதம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மீதம் உள்ள 12 பேர் கவர்னரால் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த 12 பேரும் கலை, இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் மேல்- சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை அறிவதற்காக தமிழக தேர்தல் துறை கூடுதல் செயலாளர் சந்தானகிருஷ்ணன் சமீபத்தில் ஆந்திரா சென்று வந்தார். அவர் அங்கு ஓய்வு பெற்ற மூத்த தேர்தல் அதிகாரி பர்மன் என்பவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.

மேல்- சபை தேர்தலை நடத்த பல்வேறு விதமான பணிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு யார், யார் ஓட்டுப்போடலாம் என்பது பற்றிய கணக்கெடுப்பு, அது தொடர்பான புள்ளி விவரங்கள், பல்கலைக்கழகங்கள், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

ஆந்திராவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றவர்களும், பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடலாம் என்ற விதி உள்ளது. தமிழ்நாட்டில் அது போன்று அனுமதிக்க முடியுமா? என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் மேல்- சபை தேர்தலை நடத்துவது புதியது. இதுவரை அனுபவம் இல்லை. எனவே அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்க வேண்டியது உள்ளது.

தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டிய துள்ளது. இவை பற்றியெல்லாம் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேல்-சபை தேர்தலுக்கான அடுத்தக் கட்ட பணிகளை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.

ஆந்திராவில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி புதிய மேல்-சபை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கி 2007 மார்ச் மாதம்தான் நிறைவு பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் எப்போது இந்த தேர்தல் நடக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பக் கட்ட தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது.

இவ்வாறு தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

இலங்கை மன்னார் பகுதியில் தோண்ட, தோண்ட தமிழர் பிணங்கள்: மிகப்பெரிய புதை

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது.


என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின் கிராமங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு தமிழர்கள் குடி அமர்த்தப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட நிலையில் நாச்சிக்குடா பகுதியில் மட்டும் மக்கள் மீண்டும் குடியேற தடை விதிக்கப்பட்டது. அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் சிங்கள ராணுவம் மேற்கொள்ளவில்லை.

நாச்சிக்குடா பகுதிக்குள் மக்களை ராணுவத்தினர் வர விடவில்லை. இது ஈழத்தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித புதை குழிகள் இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் கூறி இருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நாச்சிக்குடாவில் பெரிய, பெரிய மனித புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் அந்த புதை குழிகளை கண்டுபிடித்தனர். நாச்சிக்குடா முழுவதும் புதை குழிகளாக இருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதை குழிகளை தோண்ட, தோண்ட ஈழத்தமிழர்களின் பிணங்கள் வருகிறது. புதைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போரின்போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் பிடிபட்டனர். மேலும் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்களை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர்.

அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ராணுவம், நாச்சிக்குடாவில்தான் புதைத்தது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பிணங்கள், எலும்புக்கூடுகளாக இருந்தன. எண்ண முடியாத அளவுக்கு இந்த பிணக்குவியல் இருப்பதாக வெளிநாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆனால் இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை. இந்திய அரசு மவுனமாக இருந்து ஓசையின்றி பின்னணியில் இருப்பதால் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

மாஞ்சா வேலு-திரைவிமர்சனம்



படத்தோட விமர்சனம் பார்க்க வந்தீங்களா........ எதுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியில படம் மொக்கைனு சொல்லனும்...அதோட விமர்சனம் எழுதுவதற்க்கு நிறைய வலை பதிவு நன்பர்கள் இருக்குறதால ஒரெ வரில படத்த பத்தி சொல்லலாம்னு நினைக்குறேன்.... அதுக்கு கொஞ்சம் கீழ வாங்க...

















மாஞ்சா வேலுவுக்கு சுறா எவ்வளவோ தேவலை ...(ரென்டு படத்துக்கும் ஒரெ வித்யாசம் விஜய் மொக்கை போட்டார்னா , அருண் விஜய் மரன மொக்கை போட்டுருக்கிறார்..)

கூடுதல் கட்டணம் கொடுக்க விரும்புவதாக பெற்றோர்களிடம் கட்டாய கடிதம் வாங்கும் தனியார் பள்ளிகள்

எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி கல்வி கட்டணத்தை
நிர்ண யித்துள்ளது.

தொடக்கப்பள்ளிவரை படிக்கும் குழந்தைகளிடம் அதிகபட்சமாக ரூ.5000 வரையிலும், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7000 மும் உயர் நிலைப்பள்ளி (9-10 வகுப்பு) மாணவர்களுக்கு ரூ.9000மும், மேல்நிலைப்பள்ளி (பிளஸ்-1, பிளஸ்-2) மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000மும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் குறைவாக உளளதாகவும் அதைவிட கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருப்தி அளிக்காத பட்சத்தில் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1200 பள்ளி நிர்வாகிகள் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இந்தநிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணயித்து அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே கூடுதலாக கட்டணம் வசூலித்துவிட்டனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர். பெறப்பட்ட கட்டணத்துக்கு சிலர் ரசீதும் வழங்கியுள்ளனர். சில பள்ளிகள் வாய்மொழியாக கட்டணத்தை கூறி பெற்றுக்கொண்டனர்.

கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் கூடுதலாக பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுப்பார்களா என்று எதிர்பார்க்கின்றனர். பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தை திருப்பி கேட்டால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. கட்டணத்தை திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

சில பள்ளி நிர்வாகம் நாங்கள் மேல் முறையீடு செய்துள்ளோம். இதனால் கட்டணம் மேலும் உயரும், காத்திருங்கள்” என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் சில தனியார் பள்ளிகள் இதற்கெல்லாம் மேலாக பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கி வருகிறார்கள்.

நாங்கள் விரும்பியே கூடுதல் கட்டணத்தை செலுத்தியுள்ளோம். குழந்தைகளின் படிப்புத்தான் முக்கியம். அதனால் கட்டணத்தை திரும்ப கேட்கமாட்டோம், என பெற்றோர்களிடம் கட்டாய கடிதம் வாங்கியுள்ளனர். சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் இந்த புதிய யுக்தியை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களிடம் வாங்கிய கடிதத்தை குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள் நலனுக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளும் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய அணுகுமுறைகளை கையாள்கிறார்கள்.

ஒழுங்கா நடிக்கலைன்னா அடிப்பேன்! எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி!!

என்னுடைய பட கம்பெனி ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக் கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். ஒழுங்காக நடிக்கவில்லையென்றால் அடிப்பேன், என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.


டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறார். இவரது 66வது படம் வெளுத்துக்கட்டு. தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அஷபவங்களையே இப்படத்தின் கதை- திரைக்கதையாக்கி இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.. அவரிடம் உதவியாளராக இருந்த சேனாதிபதி மகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் கதிர், கதாநாயகி அருந்ததி, இசையமைப்பாளர் பரணி, டைரக்டர் சேனாபதி மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:-


இந்தக்காலத்து இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து விடுகிறார்கள். பிளஸ்2 பரீட்சையில் தோல்வி அடைந்தால், தூக்கில் தொங்குகிறார்கள். அப்பா திட்டினால், விஷம் குடிக்கிறார்கள். வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வு, இளைஞர்களிடம் குறைவாக இருக்கிறது. வாழ்க்கையில், குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த படம். சின்ன வயதில், நான் ரொம்ப முரட்டுப்பயலாக இருந்தேன்.


ரெயிலில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்னைக்கு புறப்பட்டேன். திருச்சியில் இறக்கி விட்டார்கள். மறுபடியும் இன்னொரு ரெயிலில் ஏறினேன். விழுப்புரத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து இன்னொரு ரெயிலில் ஏறினேன். செங்கல்பட்டில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து நடந்தே சென்னைக்கு வந்தேன். எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதே அம்மாவை 24 வருடங்களாக என்னுடன் வைத்து பாதுகாத்தேன். என் வீட்டில்தான் அம்மா இறந்தார். அதையெல்லாம்தான் இந்த படத்தில் வைத்து இருக்கிறேன்.


சட்டம் ஒரு இருட்டறை படத்தின் கதையை, 29 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். போடா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். நான் சோர்ந்து போய்விடவில்லை. 30வது தயாரிப்பாளர் வடமலை சிதம்பரத்திடம் சொல்லி, வெற்றிபெற்றேன். இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறேன். 25 படங்களை தயாரித்து இருக்கிறேன். என்னுடைய பட கம்பெனி, ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக்கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். அடிக்க வேண்டும் என்று அடிப்பதில்லை. ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் அடிக்கிறேன். நான், ஒரு குரு மாதிரி.


இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

தலையங்கம்பயணம் எங்கே...?

'தென்னையில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா' என்று கேட்பார்கள்.​ கட்டும் என்று நிரூபித்திருக்கின்றன சமீபகாலத்திய பல உலக நிகழ்வுகள்.​ கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.​ கோலாலம்பூரில் மட்டுமா?​ உலகமெங்கும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் எல்லாம் ஒரே குழப்பம்.​ பயணிகளின் எதிர்பார்ப்பும் கவலையும் தேங்கிய முகங்கள்.​ காரணம் -​ ஐஸ்லாந்திலுள்ள ''அயயா பியா லா எர்குல்'' எரிமலை வெடித்துச் சிதறியதால் எழுந்த சாம்பல் மேகங்கள்,​​ மேற்கு ஐரோப்பா கண்டத்தின்மீது படர்ந்து காணப்படும் ஆபத்து.


மார்ச் 20-ம் தேதி சிறிய அளவில் வெடித்த இந்த எரிமலை,​​ ஏப்ரல் 14-ம் தேதி மீண்டும் நெருப்பைக் கக்கியது.​ விட்டுவிட்டு வெடித்துச் சிதறும் இந்த எரிமலையிலிருந்து கிளம்பும் சாம்பல் மேகங்கள் கடந்த மூன்று நாள்களாக ஐரோப்பிய விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றன.​ எரிமலை வெடிப்பதால் வெளிவரும் சாம்பல் சிறிய கண்ணாடித் துகள்களைப் போன்றவை என்பதுடன் பாறைகள் துகள்களாக வெளிப்படுபவை என்பதால் விமானங்களின் இயந்திரங்களைப் பாழாக்கி,​​ செயலிழக்கச் செய்யும் அபாயமும்,​​ விமானங்களின் இறக்கைகளைப் பழுதாக்கும் அளவுக்குப் பலமானவை என்பதும்தான் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்திருப்பதன் காரணம்.


இப்போது வெடித்திருப்பது சின்ன எரிமலைதான்.​ அதற்கே இத்துணை பாடு.​ பிரச்னைகள்.​ ஐஸ்லாந்தில் கட்லா என்கிற மிகப்பெரிய எரிமலை எந்த நேரமும் வெடித்துச் சிதறக் காத்திருக்கிறது.​ சாதாரணமாக 40 முதல் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடித்துச் சிதறும் இந்தக் கட்லா எரிமலை கடந்த முறை 1918-ல் வெடித்தது.​ அதுமட்டுமல்ல,''அயயா பியா லா எர்குல்''எரிமலை வெடிக்கும்போது,​​ அருகிலுள்ள கட்லாவையும் வெடிக்கத் தூண்டுவது வழக்கம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


விமானப் போக்குவரத்து ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.​ மனிதர்களை இணைத்தது என்பது மட்டுமல்லாமல்,​​ பூகம்பம்,​​ பஞ்சம்,​​ இயற்கைச் சீற்றங்கள் என்று ஏற்படும்போது உடனடியாக உலகிலுள்ள எந்தவொரு நாட்டுக்கும் உதவிகளை அனுப்பி உயிர்களைக் காப்பாற்ற விமானப் போக்குவரத்து மிகவும் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.​ இன்று உலகமயமாக்கல்,​​ உலகப் பொருளாதாரம் என்றெல்லாம் நாம் பேசுவதற்கு அடிப்படைக் காரணமே விமானப் போக்குவரத்தும்,​​ தகவல் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியும்தான்.


விஞ்ஞானம் வளர்ச்சியையும்,​​ வளர்ச்சி வசதியான வாழ்க்கைத் தரத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால்,​​ இந்த வளர்ச்சி என்பது நிரந்தரமான வளர்ச்சியாக இல்லாமல் போவதற்கான காரணங்களை நாம் சிந்திக்கலாகாது என்று இருந்தால் எப்படி?​ போக்குவரத்துத் துறை மற்றும் தகவல் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியால்,​​ தொலைதூரத்தில் உள்ள உற்பத்தியையும்,​​ வணிகத்தையும் நம்பி அமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைத்தரம்,​​ இவை துண்டிக்கப்பட்டாலோ,​​ ஸ்தம்பித்தாலோ சொல்லொணா துயரத்துக்கு ஆளாகாதா?


எங்கேயோ அமெரிக்க நாட்டில் பல ஆயிரம் பேர் வீட்டுக் கடன் தவணையைக் கட்டாமல் போனதன் விளைவை உலகம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.​ ஏதோ ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவை உலகளாவிய பயணிகள் எதிர்கொள்கிறார்கள்.​ இதைவிடக் கடுமையான பேராபத்துகள் காத்திருக்கின்றனவே,​​ நாம் என்னதான் செய்யப் போகிறோம்?


சூரியமண்டலப் புயல் எந்த நொடியும் ஏற்படக்கூடியது என்கிறார்கள் வானவியல் ஆராய்ச்சியாளர்கள்.​ அதிலிருந்து அளப்பரிய மின்சாரம் உருவாகி எல்லா கிரகங்களையும் தாக்கும்போது,​​ நமது டிரான்ஸ்ஃபார்மர்களில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள எல்லா மின் இணைப்புகளும் வெடித்துச் சிதறிவிடும்.​ இதன் விளைவிலிருந்து மீள பல ஆண்டுகள் ஆகும்.​ சிலவேளை மீள முடியாமலே உலகம் இருண்டு போகவும் வாய்ப்புண்டு.


பிராண வாயுவைப்போல,​​ இல்லாமல் போகும்போதுதான் மின்சாரத்தின் இன்றியமையாமையும் நமக்குப் புரியப் போகிறது.​ மின்சாரம் இல்லாவிட்டால்,​​ எண்ணெய்க் கிணறுகளிலிருந்து பெட்ரோல்கூட எடுக்க முடியாது.​ விவசாயம்,​​ உற்பத்தி,​​ வணிகம் என்று ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து விடும்.​ ஏற்கெனவே,​​ எண்ணெய்க் கிணறுகள் வற்றினால்என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் உலகம்,​​ எரிசக்திக்கு நம்பி இருக்கும் மின்சாரமும் இல்லாத நிலைமை ஏற்பட்டால் என்ன செய்யும்?


மரபுசாரா எரிசக்தியின் உற்பத்திச் செலவு அதிகம்.​ உற்பத்தி அளவும் குறைவு.​ வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்டோம்.​ குறைந்த செலவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் வாழப்படித்த மனிதனால் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைப் பயன்படுத்தி இதே வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்த முடியுமா என்பது இன்னொரு கேள்விக்குறி.


வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொண்டு கற்பனைக்கு எட்டாத தூரத்தை மனிதன் விஞ்ஞானத்தின் உதவியுடன் எட்டிப்பிடித்து விட்டது நிஜம்.​ ஆனால் கட்டிய கட்டடம் பலமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்டதல்ல என்பதை சாம்பல் மேகங்கள் 'கோடி' காட்டிவிட்டன.​ இனி ஏர்பிடித்து உழுவது,​​ மாட்டுவண்டிப் பயணம் போன்றவைகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தூரத்துக்குப் போய் விட்டிருக்கிறோம்.​ இந்தப் பயணம் எங்கே போய் முடியப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.


ஆரம்பப் பள்ளியில்,​​ ஒரு நீதிக் கதையைப் போதிப்பார்கள்.​ ஒரு குளம்,​​ அதில் மூன்று மீன்கள்.​ அவை,​​ வருமுன் காப்போன்;​ வந்ததும் காப்போன்;​ வந்தபின் காப்போன்.​ இதில் நாம் யாராக இருக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

Thursday, May 20, 2010

"டெஸ்ட்" கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் உலகத்தால் "தி லிட்டில் மாஸ்டர்" என்று செல்லமாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர் (கவாஸ்கரின் உயரம் 5 அடி. 5 அங்குலத்திற்கு அங்குலம் குறைவு). அதனாலேயே அப்படி அவரை கருதியோர் உண்டு.


ஆனால் "பேட்டிங்"கில் அவர் உயர்ந்து நின்றார். அவர் (கவாஸ்கர்) ஆடிய காலத்தில் உலகின் தலைசிறந்த "பேட்ஸ் மென்" என்று கருதப்பட்டார். "டெஸ்ட்" கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.

இத்தகைய பெருமைக்குரிய கவாஸ்கரின் முழுப்பெயர் சுனில் மனோகர் கவாஸ்கர். 1949_ம் ஆண்டு ஜுலை மாதம் 10_ந்தேதி மராட்டிய மாநிலம் பம்பாயில் (தற்போதைய மும்பை) பிறந்தார்.

1966_ல் தொடக்க ஆட்டமே அவருக்கு முதல் வெற்றி படியாக அமைந்தது. முதலில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடிவந்தார் கவாஸ்கர்.

22_வது வயதில் அவரது `டெஸ்ட்' அரங்கேற்றம் வெஸ்ட் இண்டீசில் 1971 மார்ச் மாதம் தொடங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2_வது டெஸ்டில் கவாஸ்கர் மொத்தம் எடுத்தது 774 ரன்கள் (சராசரி 154.80). அத்தொடரை இந்தியா 1_0 என வென்றது. அந்த போட்டியில் இருந்தே அவரது சாதனை தொடங்கியது.

அதிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பந்துகளை விளாசி தள்ளினார். எக்கோணத்தில் இருந்து வரும் பந்துகளையும் சாதூரியமாக சந்தித்து ஆடக்கூடிய திறமை மிக்க "பேட்ஸ்_மென்" என்ற பெருமையை பெற்றார். அந்த காலத்தில் ஆண்டி ராபெர்ட்ஸ், மைக்கேல் ஹோல் டிங், ஜெப் தாம்சன், டென்னஸ் லில்லி, இம்ரான்கான் போன்ற வேகபந்து வீச்சாளர்களை சமாளித்த கவாஸ்கர் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளங்கினார்.

மொத்தம் 17 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் இந்திய அணி வீரராக வலம் வந்த கவாஸ்கர், சாதனைக்கு மேல் சாதனை படைத்தார்.

`பேட்டிங்' மாமேதை என்று கருதப்பட்ட டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 52 டெஸ்ட்டுகளில் 6,996 ரன்கள் (சராசரி 99.94) எடுத்து 29 சதம் (செஞ்சுரி) அடித்தது உலக சாதனையாக இருந்தது. அதனை கவாஸ்கர் 1983 டிசம்பர் மாதம் 28_ந்தேதி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முறியடித்தார். அன்று கவாஸ்கர் அடித்தது 30_வது "செஞ்சுரி" ஆகும்.

அவர் "செஞ்சுரி" அடித்து சாதனை புரிவதை பார்க்க ஆவலுடன் காத்திருந்த 45 ஆயிரம் ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஸ்டேடியமே அதிரும் வண்ணம் ரசிகர்களின் கரவொலியும், ஆனந்தக் கொண்டாட்டமும் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன. கவாஸ்கர் தனது "பேட்"டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரவிசாஸ்திரி ஓடிவந்து கவாஸ்கரை கை குலுக்கி பாராட்டினார்.

சென்னை கிரிக்கெட் போட்டி கவாஸ்கரின் சரித்திர புகழ் படைக்கும் போட்டியாக அமைந்தது. அந்த ஆட்டத்தில்
236 ரன்களை குவித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். அதன் மூலம் சென்னை மண்ணில் கவாஸ்கர் 2 புதிய சாதனைகளை படைத்தார். போட்டியின் சிறந்த வீரராக (மேன் ஆப் தி மேட்ச்) அறிவிக்கப்பட்டு பரிசுகள் குவிந்தன.

"தம்ஸ் அப்" குளிர்பான நிறுவனம் கவாஸ்கருக்கு "மாருதி கார்" பரிசளித்தது. சென்னை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.சிதம்பரம் ரூ.10 ஆயிரம் வழங்கினார். கிரிக்கெட் ரசிகரான தமிழக அமைச்சர் ராகவானந்தம் தனது சொந்த பொறுப்பில் கவாஸ்கருக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.

அதுமட்டுமல்ல `டெஸ்ட்' கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் கவாஸ்கர் நிகழ்த்தினார். அவர் மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை (சராசரி 51.12) குவிந்தார். (34 சதம், 45 அரை சதம் இதில் அடங்கும்) 106 டெஸ்ட் தொடர்களில் இடைவிடாது ஆடி இருக்கிறார். 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி அதிகபட்சமாக 236 ரன் எடுத்துள்ளார். கவாஸ்கர் அடித்த 34 செஞ்சுரிகளில் கிட்டத்தட்ட பாதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் எடுத் தவை. (மீதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8, பாகிஸ்தானுக்கு எதிராக 5, இங்கிலாந்துக்கு எதிராக 4, நிïசிலாந்து, இலங்கைக்கு எதிராக தலா 2 சதம் அடித்துள்ளார்.)


இலங்கைக்கு எதிராக 1986 டிசம்பரில் கான்பூரில் எடுத்த 176 ரன்தான் கவாஸ்கர் எடுத்த கடைசி சதம் ஆகும்.

இந்திய அணியை 47 `டெஸ்ட்' ஆட்டங்களில் கேப்டனாக இருந்து வழி நடத்தி இருக்கிறார். இதில் 9 போட்டிகளில் வெற்றி, 8 போட்டியில் தோல்வி, 30 போட்டிகள் `டிரா'வில் முடிந்தன.

கேப்டன் பதவியை துறந்த பிறகும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார். `டெஸ்ட்' போட்டியை போல ஒரு நாள் போட்டியில் அவரால் அதிகமாக ஜொலிக்க முடியவில்லை. 108 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 3,092 ரன் குவித்தார் (இதில் ஒரு சதம், 27 அரை சதம் அடங்கும்).

தனது 38_வது வயதில் கவாஸ்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
1987_ம் ஆண்டு லண்டனில் சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் கிளப் தோன்றி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் இங்கிலாந்து அணியும், உலக அணியும் மோதின. உலக அணியில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் இடம் பெற்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கரும், கபில்தேவும் பங்கேற்றார்கள். இந்த போட்டியில் கவாஸ்கர் 80 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அங்குதான் தனது ஓய்வு பெறும் முடிவை கவாஸ்கர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"லண்டனில் நடைபெறும் இந்த 5 நாள் போட்டிதான் நான் கடைசியாக கலந்து கொள்ளும் டெஸ்ட் ஆகும். இந்தியா _ பாகிஸ்தான் இணைந்து நடத்தும் ரிலையன்ஸ் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் விளையாடுவேன். அதன் பிறகு கிரிக்கெட் ஆடமாட்டேன்.

எனக்கிருந்த கிரிக்கெட் பசி இப்போது அடங்கிவிட்டது. ஏன் ஓய்வு பெறவில்லை என்று யாரும் கேட்பதற்கு முன்பே விலகிவிடவேண்டும். ஏன் ஓய்வு பெறவில்லை என்று கேட்கும் வரை காத்திருக்க கூடாது."

இவ்வாறு கவாஸ்கர் கூறினார். என்றாலும் கவாஸ்கர் சில ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்த்தார் கள். ஆனால் 1987 நவம்பர் 9_ந்தேதி கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்ரீராமனுக்கு தனது விலகல் கடிதத்தை கவாஸ்கர் அனுப்பி வைத்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான வாடேகர், பெடி, பட்டோடி நவாப் போன்றவர்கள் கவாஸ்கருக்கு புகழாரம் சூட்டி அவரது முடிவை வரவேற்றார்கள். "நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் இவர் (கவாஸ்கர்) தான் தலைசிறந்த வீரர்" என்று கிரிக்கெட் வீரர் தேர்வு குழு தலைவர் பாபுநட்கர்னி தெரிவித்தார்.

ஓய்வுக்குப்பிறகு சிறிது காலம் கவாஸ்கர் கிரிக்கெட் நடுவராகவும் (ரெப்ரி), பிறகு வர்ணனையாளராகவும் இருந்தார். தனது வாழ்க்கை சுயசரிதையையும், கிரிக்கெட் சம்பந்தமாக பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கவாஸ்கரின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசு 1977_ம் ஆண்டு "அர்ஜுனா" விருதும், 1979_ம் ஆண்டு "பத்மபூஷன்" விருதும் வழங்கி கவுரவித்தது.