Friday, May 21, 2010

ஒழுங்கா நடிக்கலைன்னா அடிப்பேன்! எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி!!

என்னுடைய பட கம்பெனி ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக் கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். ஒழுங்காக நடிக்கவில்லையென்றால் அடிப்பேன், என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.


டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறார். இவரது 66வது படம் வெளுத்துக்கட்டு. தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அஷபவங்களையே இப்படத்தின் கதை- திரைக்கதையாக்கி இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.. அவரிடம் உதவியாளராக இருந்த சேனாதிபதி மகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் கதிர், கதாநாயகி அருந்ததி, இசையமைப்பாளர் பரணி, டைரக்டர் சேனாபதி மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:-


இந்தக்காலத்து இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து விடுகிறார்கள். பிளஸ்2 பரீட்சையில் தோல்வி அடைந்தால், தூக்கில் தொங்குகிறார்கள். அப்பா திட்டினால், விஷம் குடிக்கிறார்கள். வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வு, இளைஞர்களிடம் குறைவாக இருக்கிறது. வாழ்க்கையில், குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த படம். சின்ன வயதில், நான் ரொம்ப முரட்டுப்பயலாக இருந்தேன்.


ரெயிலில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்னைக்கு புறப்பட்டேன். திருச்சியில் இறக்கி விட்டார்கள். மறுபடியும் இன்னொரு ரெயிலில் ஏறினேன். விழுப்புரத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து இன்னொரு ரெயிலில் ஏறினேன். செங்கல்பட்டில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து நடந்தே சென்னைக்கு வந்தேன். எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதே அம்மாவை 24 வருடங்களாக என்னுடன் வைத்து பாதுகாத்தேன். என் வீட்டில்தான் அம்மா இறந்தார். அதையெல்லாம்தான் இந்த படத்தில் வைத்து இருக்கிறேன்.


சட்டம் ஒரு இருட்டறை படத்தின் கதையை, 29 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். போடா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். நான் சோர்ந்து போய்விடவில்லை. 30வது தயாரிப்பாளர் வடமலை சிதம்பரத்திடம் சொல்லி, வெற்றிபெற்றேன். இதுவரை 65 படங்களை இயக்கியிருக்கிறேன். 25 படங்களை தயாரித்து இருக்கிறேன். என்னுடைய பட கம்பெனி, ஒரு மிலிட்டரி ஸ்கூல் மாதிரி. சவுக்கு வைத்துக்கொண்டுதான் நடிகர்களிடம் வேலை வாங்குகிறேன். அடிக்க வேண்டும் என்று அடிப்பதில்லை. ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் அடிக்கிறேன். நான், ஒரு குரு மாதிரி.


இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

No comments:

Post a Comment