Sunday, April 25, 2010

பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை!


நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், இன்றைய தேதிக்கு சுமார் எட்டு லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் அவர். பெயரை சொன்னா சரியா இருக்காது. வேணும்னா ஒரு க்ளு. மூன்றெழுத்து நடிகை. கடைசி எழுத்து கா! நல்ல 'அழகி'ன்னு சொல்லலாம்.

ஏறத்தாழ மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பேட்டிக்காக போயிருந்தேன் அவரு வீட்டுக்கு. அன்னைக்கு பார்த்து வண்டி ரிப்பேர்ங்கிறதால ஆட்டோ சவாரி. பேட்டிய முடிச்சுட்டு கிளம்பும்போதுதான் அவங்க அப்பாவை பார்த்தேன். (முன்னாடியே பார்த்திருந்தா பேட்டியவே 'டிராப்' பண்ணியிருக்கலாம்) சின்ன சின்ன குவாட்டர்களா போட்டு செஞ்ச மாதிரியே இருந்தாரு மனுஷன்.

"சார், ஒங்க பொண்ணு போட்டோவ கொடுங்க"

"போட்டோவ வாங்கிட்டு போனா யாரு திருப்பி தர்றீங்க? ஏகப்பட்ட போட்டோ இப்படியே போயிருச்சு. நான் கோயமுத்து£ர் கவுண்டன்(?) என்னை யாரும் ஏமாத்த முடியாது. வேணும்னா சிடி இருக்கு. அதுவும் ஒன்னுதான் இருக்கு. காப்பி பண்ணி தரட்டுமா"ன்னாரு. கொடுங்கன்னேன். "வீட்ல கம்ப்யூட்டர் இல்லீயே? வாங்க, எங்கேயாவது காப்பி பண்ணலாம்" வண்டியை கிளப்பினார்.

வண்டிக்கும் சேர்த்து 'சரக்கு' போட்டிருப்பாரு போல, தேடி தேடி குழியிலேயே இறங்கிச்சு வண்டி. சிறிது நேரத்தில் மாட்டு வண்டிய ஓட்டுறது மாதிரியே கரடு முரடா ஓட்ட ஆரம்பிச்சாரு. "சார்... நான் வேணா நடந்தே வர்றேன். இடத்தை மட்டும் சொல்லிருங்க"ன்னேன். "ந்தா வந்திருச்சு" என்று பிரேக் அடித்து ஓரிடத்தில் நிறுத்தினார். இருவரும் உள்ளே போனோம். "சார், டிவிடி ல காப்பி பண்ண 150 ரூவா!" கடைக்காரன் சொல்ல, யோவ், நான் கோயமுத்து£ர் கவுண்டன். என்னை ஏமாத்துலாம்னு பாக்கிறீயா? வேணாம் வுடு. உட்காருங்க சார்"னு மறுபடியும் அந்த நெடும் பயணத்தை, இல்லையில்லை கொடும் பயணத்தை துவங்கினார்.

ஒவ்வொரு பள்ளத்திலும் வண்டியை விடும்போதும் எனக்கு பயங்கர சிரிப்பு. பத்திரிகை துவங்கி இது எத்தனையாவது வருடம் என்பதையும், புத்தகத்தின் எண்ணிக்கையையும் குறிக்க, மலர் ஒன்று-இதழ் முப்பத்தி ரெண்டு என்பது மாதிரி அச்சிட்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர் பள்ளத்தில் இறக்கும்போதும், நான் 'விரை ஒன்று வீக்கம் பத்து, பதினொன்று' என்றே கணக்கிட்டு வந்தேன். அதனால்தான் அந்த பயங்கர சிரிப்பு.

"சார் விடுங்க. நான் நண்பர்கள் யாருட்டேயாவது ஸ்டில் வாங்கிக்கிறேன்"னு சொன்னதையும் பொருட்படுத்தாமல் விரைவாக வண்டியை செலுத்தி ஓரிடத்தில் நிறுத்தினார். 100 அடி ரோட்டில் உள்ள போட்டோ ஷாப். நல்லவேளையாக 50 ரூபாய் கேட்டார்கள். "தம்பி, நான் கோயமுத்து£ர் கவுண்டன். ஏமாந்திருவேனா? அவன்கிட்டே கொடுத்திருந்தா 150 ரூவா போயிருக்கும்"னவரு, "வாங்க, அவரு காப்பி பண்ணட்டும். பக்கத்திலே போயிட்டு வந்திருவோம்"னாரு. அவருக்கு ஏத்த மாதிரி பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்! "ஒங்களுக்கு...?" "ஒன்னும் வேணாம் சார். சீக்கிரம் போயிரலாம்"னேன். "என்ன தம்பி நீங்க? ஒரு பீராவது குடிக்கலாம். சரி விடுங்க, ஒரே ஒரு கட்டிங்"னுட்டு போனவரு திரும்பி வரும்போது, கையிலே ரெண்டு குவாட்டர் பாட்டில்.

மொத பாட்டிலே பிரிச்சு சர சரவென்னு காலி பண்ணியவரு, ரெண்டாவது பாட்டிலை பிரிக்க திராணியில்லாம மூடி எது, கிளாஸ் எதுன்னு தெரியாத ரேஞ்சுக்கு போயிட்டாரு. இந்தாள கொண்டு போயி வீட்டுல சேர்க்கிறதா? இல்ல இப்படியே விட்டுட்டு கிளம்பிடுறதா? ஒரே குழப்பம் எனக்கு. "த...ப்ம்ம்வீ, என்..ன்ன்னன யாருழ்ம் ஏமமாழ்த்மம மொழிட்யி£து. நாழ்ன் கோழ்யமத்து£ர்ரு கழ்வுன்ன்டேன்,,..." அவ்வளவு போதையிலும் பஞ்ச் டயலாக் வேற!

கோயமுத்து£ர் கவுண்டன், இப்படி கவுன் 'டவுன்' ஆவார்னு நான் நெனச்சு கூட பார்க்கலே.

அவரு கையிலே இருந்த வண்டி சாவிய வாங்கி எப்படியாவது முன்னாடி உட்கார வச்சு வீட்டுக்கு கொண்டு போயிரலாம்னு நினைச்சா, மனுசன் சாவியை இருக்கமா பிடிச்சுகிட்டு தரவே இல்லை. நாம பிடுங்கி, அந்தாளு கத்தி, வம்பே வேணாம்! அந்த பொண்ணுக்கே போன் அடிச்சிர வேண்டியதுதான். விஷயத்தை சொன்னா, "சார் அப்படியே விட்டுட்டு போயிராதீங்க. எப்படியாவது வீட்டில கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒங்களுக்கு புண்ணியாப் போவும்"னுச்சு. இருதலைக் கொள்ளி எறும்பா இருந்தாலும் பரவாயில்லை. எறும்பைவிட சின்னதா இருக்கிற துரும்பாயிட்டேன் நான். அவரை ஆட்டோவிலே ஏத்தலாம்னு ட்ரை பண்ணினா, என்னை கடத்தப் பாக்கிறியான்னாரு பயங்கரமாக!

"இல்லங்க. நீங்களே ஆளு யாராவது அனுப்புங்க"ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் இருக்கிற இடத்தையும் அடையாளம் சொல்லிட்டேன். வேறு யாராவது வருவாங்கன்னு பார்த்தா, அந்த நடிகையே பர்தா போட்டுட்டு வந்திடுச்சு. எனக்கு பரிதாபம் ஒரு பக்கம். ஆச்சர்யம் மறுபக்கம். ஆட்டோ டிரைவர் பாருக்குள்ளே போய் அந்தாள து£க்க, அவருகிட்டேயும் அதே பிரச்சனை. பெரிய போராட்டத்திற்கு பிறகு, ஏதோ கவச குண்டலத்தோடவே பொறந்த மாதிரி அவ்வளவு போதையிலும் அந்த குவார்ட்டர் பாட்டிலை விடாம புடிச்சிகிட்டு வெளியிலே வந்தார்.

வண்டி சாவியே வாங்கி, பின்னாடியே ஓட்டிட்டு போய் வண்டிய விட்டுடலாம்னு நினைச்சு சாவியை கேட்டா, "நான் கோய..."ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக்கையும் சாவியையும் விடாம இறுக்கமா பிடிச்சுகிட்டார். அங்கே இருந்து அசிங்கப்பட வேண்டாம்னு நினைச்ச நடிகை, "சரி சார் வண்டியை அப்புறமா எடுத்துக்கலாம். நீங்க கௌம்புங்க. ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்சு"ன்னுச்சு.

சிடியை வாங்கிகிட்டு ஆபிசுக்கு போயிட்டேன். மறுநாள் போன் பண்ணி "வண்டிய எப்போ எடுத்தீங்க?"ன்னு ஒரு பேச்சுக்கு கேட்டபோதுதான் ஷாக்கா இருந்திச்சு. இந்தாளு பண்ணிய களேபரத்திலே அந்த பொண்ணும் வண்டிய மறந்திருச்சு போல. மறுநாள்தான் போய் பார்த்திருக்காங்க. பார் வாசல்ல வண்டிய வச்சா எடுக்காம போற அளவுக்கு நல்லவங்க இருக்கானுங்களா என்ன? வண்டி அம்போ...
.............................................நன்றி அந்தனன்........................................

No comments:

Post a Comment