ரூம் போட்டு யோசிப்பாங்களோ? சில்லரை நாணயம் என்று கூறி உப்பு மூட்டையை கொடுத்து ரூ.10 ஆயிரம் அபேஸ்; மயிலாப்பூர் ஓட்டலில் துணிகரம்
பாலீஸ் போடுவதாக கூறி நகை மோசடி, வீட்டில் பூஜை செய்வதாக கூறி பண மோசடி, என வித விதமான மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் சென்னையில் புதிய பூதமாக கிளம்பியுள்ளது. நாணய மோசடி.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை சிறிய மூட்டையில் கட்டி... அதனை ஒரு பையில் போட்டு... அதற்கு மேல் சில்லரை நாணயங்களை கொஞ்சம் சிதற விட்டு... மோசடி பையுடன் வலம் வரத்தொடங்கி உள்ளது ஒரு கும்பல். மயிலாப்பூர் லஸ் கார்னரில் நேற்று இரவு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த ஓட்டல்.
அண்ணாச்சி வணக்கம் என்றபடியே வந்தார் வாலிபர் ஒருவர். 10 ஆயிரம் ரூபாய் சில்லரை காசு இருக்கிறது. அதனை பணமாக்கிட்டு போகலாம்னு வந்தேன் என்று கூறிய அந்த வாலிபர் கேஷியரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். வாலிபரின் மயக்கும் பேச்சில் கவிழ்ந்த கேஷியர், ரூ.10 ஆயிரம் பணத்தை கத்தையாக எண்ணிக் கொடுத்தார். பதிலுக்கு சில்லரை மூட்டையை கொடுத்து விட்டு “எஸ்கேப்” ஆனார் வாலிபர்.
மூட்டையை பிரித்து பார்த்த ஓட்டல் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது உப்பு மூட்டை. அதில் பெயரளவுக்கு மட்டுமே சில்லரை காசுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் கேஷியர் இது குறித்து மயிலாப்பூர் போலீசில் புகார் செய்ய சென்றார்.
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. புகார் வேண்டாம் என்று கூறி விட்டு சென்று விட்டார் என போலீசார் தெரிவித்தனர். ரூ.10 ஆயிரம் பணத்துடன் தப்பிய மோசடி வாலிபர் யார்? எங்கிருந்து வந்தார் என்பது தெரியவில்லை.
சென்னையில் இதுபோல பல ஓட்டல்களில் ஒரு கும்பல், சில்லரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த மோசடி கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் ஏமாத்து ராங்கய்யா... ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
No comments:
Post a Comment