Thursday, May 6, 2010

பாதுகாப்பை மீறி நுழைந்த தீவிரவாதி அமெரிக்கா கடும் அதிர்ச்சி: நாடு முழுவதும் சோதனை

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சதுக்கத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி பைசல் ஷகாசத் என்பவர் கார் குண்டு வைத்து தகர்க்க முயன்றான். குண்டு வெடிப்பதற்குள் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


குண்டு வைத்ததும் பைசல் ஷகாசத் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட விமானத்தில் புறப்பட்டான். ஆனால் போலீசார் அவனை கண்டுபிடித்து மடக்கி பிடித்துவிட்டனர்.


அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதற்கு பிறகு தீவிரவாதிகளின் வேறு எந்த தாக்குதலும் அமெரிக்காவில் நடந்தது இல்லை. அமெரிக்க விமானங்களை பல இடங்களில் தகர்க்க முயற்சி நடந்தாலும் கூட அமெரிக்க மண்ணில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.


விமான தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டதால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பார்த்து கொண்டனர்.


ஆனால் இப்போது நியூயார்க் நகரிலேயே தாக்குதல் முயற்சி நடந்து இருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.


பாகிஸ்தானை சேர்ந்த பைசல் ஷகாசத் நீண்ட நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருந்து இருக்கிறான். அவன் தீவிரவாதி என்பதை கூட அமெரிக்க போலீசார் கடைசிவரை கண்டுபிடிக்கவில்லை. அது மட்டும் அல்ல அவனுக்கு சமீபத்தில்தான் அமெரிக்கா குடியுரிமையை வழங்கி உள்ளது. அவன் பாகிஸ்தான் வந்து தீவிரவாத பயிற்சி பெற்று திரும்பி உள்ளான். அதையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.


பைசல் ஷகாசத் அமெரிக்காவிலேயே உரம், வெடிபொருள் போன்றவற்றை வாங்கி வெடிகுண்டை தயாரித்து இருக்கிறான். அதையும் கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டனர்.
இது அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்பட்ட தோல்வி என்றே கருதப்படுகிறது. இந்த குண்டு வெடித்து இருந்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பார்கள்.


அப்படி நடந்து இருந்தால் அமெரிக்காவில் எந்த அளவுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும். இது அமெரிக்காவுக்கு அவமானத்தை தேடித்தருவதாகவும் அமைந்திருக்கும்.


இது போல மீண்டும் சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்க நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் அனைத்து நபர்களையும் கண்காணித்து வருகின்றனர்.


வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக புதிய நடைமுறைகளை வகுத்து உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் சந்தேகப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி விமான நிலைய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


பைசல் ஷகாசத் பாகிஸ்தானை சேர்ந்த விமானப்படை அதிகாரி அதார் அப்பாசின் மகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரோஷி கூறும்போது பைசல் ஷகாசத் பாகிஸ்தானை சேர்ந்தவர் அல்ல என்று கூறினார்.

No comments:

Post a Comment